School Morning Prayer Activities 02 02 20226

School Morning Prayer Activities 02.02.26 | பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 02.02.2026



திருக்குறள் :

பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம்:அருளுடைமை

குறள் :245

அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லன்மா ஞாலங் கரி.

விளக்கம்:

அருள் உடையவர்க்கு இவ்வுலகில் துன்பம் வராது; இதற்குக் காற்று உலவும், வளம் மிக்க இந்தப் பேருலகமே சான்று.

பழமொழி :

    Better be alone than in bad company
    ஒவ்வாக் கூட்டிலும் தனிமை அழகு.


இரண்டொழுக்க பண்புகள் :

1. இயற்கை வளங்களான நீர், காற்று, நிலத்தை பாதுகாத்து என்னால் முடிந்த அளவு அவற்றை மாசு படுத்தாமல் இருப்பேன்.
2.மின்சாரம் போன்ற எரி பொருட்கள் வீணாக்காமல் சிக்கனமான உபயோகிப்பேன்


பொன்மொழி :

இன்னும் எவ்வளவு தொலைவு இருக்கிறது என பார்ப்பதைவிட எப்போதும், எவ்வளவு தொலைவு கடந்து வந்திருக்கிறீர்கள் என பாருங்கள். இந்த வேறுபாடு எத்தனை எளிதானது என்பது உங்களை வியப்பில் ஆழ்த்தும்”- ஹெய்டி ஜான்சன்


பொது அறிவு :

1. உலக சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற முதல் தமிழர் யார்?
விடை: விஸ்வநாதன் ஆனந்த்

2. தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் காடுகளின் சதவீதம்?
விடை: 17 சதவீதம்

English words & meanings :

    Spongology – study of sponges. கடற்பஞ்சு குறித்த அறிவியல்.
    Spontaneous - happening natural without any outside force. தானே இயங்குகின்ற


ஆரோக்ய வாழ்வு :

கடுகு - சிறிதளவு இஞ்சி, கால் ஸ்பூன் சீரகப் பொடி, சிறிது பெருங்காயம். சிறிதளவு கடுகுப் பொடி, 2 சிட்டிகை உப்பு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர புளி ஏப்பம் சரியாகும். அஜீரணம் கோளாறு, வயிறு உப்புசம் குணமாகும்.

பிப்ரவரி 02 -உலக சதுப்பு நில நாள் 


உலக சதுப்பு நில நாள் (World Wetlands Day) என்பது சதுப்பு நிலங்களின் முக்கியத்துவத்தினை மக்கள் அறிந்து கொள்ள கொண்டாடப்படும் நாளாகும். உலகில் உவர்நீர் நிறைந்த கடலுக்கும், நிலங்களுக்கும் இடையில் குறைந்த ஆழத்தில் ஆண்டு முழுவதும் நீர் தேங்கி இருக்கும் பகுதியாக சதுப்பு நிலங்கள் உருவாகின. பூமியின் மொத்தப் பரப்பில் 6 சதவீத பகுதி சதுப்பு நிலங்களாக உள்ளன. இவை பெரும்பாலும் இயற்கையாக உருவானவை, மனிதனால் உருவாக்கப்பட்டவை என இரண்டு பிரிவாக வகைப்படுத்தப்படுகின்றன.
அலையாத்திக் காடுகள், குட்டைகள் உள்ளிட்டவை இயற்கையாக உருவானவை என்றும், ஏரிகள், குளங்கள், நீர்தேங்கும் குவாரிப்பள்ளங்கள் ஆகியவை மனிதனால் உருவாக்கப்பட்டவை என்றும் வகைப்படுத்தப்படுகின்றன.

நீதிக்கதை

ஓர் ஊரில் இரண்டு நண்பர்கள் வாழ்ந்து வந்தனர்.இருவரும் எப்போதும் இணைபிரியாமல் இருந்தனர்.ஒருவன் பாலு. மற்றொருவன் சோமு.இருவரில் சோமு பாலு மீது உண்மையான அன்பு கொண்டிருந்தான்.எப்போதும் பொறுமையாகவும், பணிவுடனும் இருப்பான்.ஆனால் பாலு தன் நட்புதான் உயர்ந்தது. தனக்குதான் நட்பைப் பற்றி அதிகமாகத் தெரியும் என்று பெருமையாகப் பேசிக் கொண்டிருப்பான்.

ஒரு முறை இருவரும் பக்கத்து ஊருக்கு ஒரு விழாவுக்குப் போகவேண்டி இருந்தது.அதிகாலையிலேயே இருவரும் புறப்பட்டனர்.ஊருக்கு வெளியே ஒரு அடர்ந்த காடு இருந்தது. இருவரும் அந்தக் காட்டின் நடுவே இருந்த ஒத்தையடிப் பாதையில் நடக்கத் தொடங்கினர்.

திடீரென்று ஊஊ என்று சோமு குரல் எழுப்பினான்.

அந்தக் குரலைக் கேட்டு திடுக்கிட்ட பாலு பட்டென்று சோமுவின் கன்னத்தில் ஒரு அறை கொடுத்தான்.திடுக்கிட்ட சோமு சற்றும் கோபப்படாமல் “பாலு, என்னை ஏன் அடித்தாய் என்று தெரிந்து கொள்ளலாமா?”

“இப்படித் திடீரென்று கத்தினால் நான் பயந்து விட மாட்டேனா?இப்போது சொல் ஏன் அப்படிக் கத்தினாய்?”

இந்த பகுதியில் விலங்குகள் ஏதேனும் இருந்தால் விலகி ஓடட்டும் என்றுதான் குரல் எழுப்பினேன் என்று சொன்னவுடன் சோமு மெளனமாக நடந்தான்.அப்போது வழியில் ஒரு ஆறு ஓடிக் கொண்டிருந்தது. அதில் இறங்கிய சோமு ஓடும் நீரில்.’தன்னைத் தன் நண்பன் அடித்து விட்டான்’ என்று எழுதினான்.அதைப் பார்த்த பாலு ஒன்றும் புரியாமல் திகைத்தான்.

அவன் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு தொடர்ந்து நடந்தான் சோமு.

நடுக்காட்டில் நடந்து கொண்டிருந்தனர் இருவரும்.வழியில் ஒரு சேறு நிறைந்த குட்டை இருந்தது. அதன் கரை ஓரமாக நடந்து கொண்டிருந்த சோமு கால்வழுக்கிக் குட்டையில் விழுந்தான்.அதைப் பார்த்த பாலு அவனைக் காப்பாற்ற தவித்தான். சோமு கொஞ்சம் கொஞ்சமாக சேற்றுள் அமிழ்ந்து கொண்டிருந்தான். வேகமாகத் தன் தலையில் கட்டியிருந்த தலைப் பாகையை அவிழ்த்து சோமுவிடம் வீசி அவனைப் பற்றிக் கொள்ளச் சொல்லி சேற்றிலிருந்து மீட்டான். அதற்காக சோமு ஆயிரம் முறை நன்றி சொன்னான்.உடையைச் சுத்தம் செய்துகொண்டு தொடர்ந்து நடந்தனர்.

சற்றுத் தொலைவு சென்றவுடன் சோமு வழியில் தெரிந்த ஒரு பாறையில் சிறு கல்லால் தன் நண்பன் காப்பாற்றியதை எழுதினான். புன்னகையுடன் அதைப் பார்த்தான் பாலு..

பாலு கேட்டான்.”சோமு இப்போது பழைய கதையில் வருவது போல் கரடி வந்தால் என்ன செய்வாய்?”

“எனக்குத்தான் மரமேறத் தெரியுமே. மரத்தின்மேல் ஏறித் தப்பிவிடுவேன்.”

மரம் ஏறத் தெரியாத பாலு உடனே சிந்தனை வயப்பட்டான்.

அவன் அஞ்சியது போலவே ஒரு சல சலப்பும் உறுமலும் கேட்டது.

சோமுவும் சட்டென நின்றான்.பாலுவின் கரத்தைப் பற்றிக் கொண்டான்.தர தரவென்று அவனை இழுத்துச் மரமேறத் தெரியாத பாலுவைத் தன் முதுகின்மேல் ஏறி மரக்கிளையைப் பிடித்துக் கொண்டு மரத்தின் உச்சிக்குப் போக உதவினான்.பின் தானும் ஏறி உச்சியில் அமர்ந்து கொண்டான்.காடு முழுவதும் நன்கு தெரிந்தது.பாலு எவ்வளவு பெரிய காடு என்று ஆச்சரியப்பட்டான்

சோமு”பாலு, மெதுவாகப் பேசு.அருகே ஏதோ விலங்கு இருக்கு”என்றவுடன் பாலு வாயை இருக்க மூடிக் கொண்டான்.சற்று நேரத்தில் ஒரு புலி இரைக்காக அங்குமிங்கும் அலைந்தபடி செல்வதைக் கண்டனர்.பாலு அச்சத்தில் சோமுவைக் கட்டிக் கொண்டான்.

அந்தப் புலி வெகு தூரம் சென்று விட்டதை மரத்தின் மேல் இருந்து பார்த்தபின் இருவரும் கீழே இறங்கினர்.அச்சத்துடன் இருவரும் மிக வேகமாக ஊரைச் சென்றடைந்தனர்.

“சோமு, நான் புலிக்கு இரையாகாமல் என்னைக் காத்தாய்.நீயே உண்மையான நண்பன்."பாலு,”நான் சேற்றில் அமிழ்ந்து போகாமல் என்னைக் காத்தாய் நீயே என் உண்மையான நண்பன்.”

“அதுசரி சோமு, முதல்முறை உன்னை அடித்தேன் அதை நீரில் எழுதினாய். மறுமுறை சேற்றிலிருந்து காப்பாற்றியதைக் கல்மேல் எழுதினாயே. அதுதான் ஏனென்று விளங்கவில்லை.”

“நண்பன் தவறாகத் தீங்கு செய்யும் பொழுது அதை நீர்மேல் எழுத்துப் போல மறந்துவிட வேண்டும். ஆனால் அவன் செய்யும் நன்மையைக் கல்மேல் எழுத்துப் போல ஒருகாலும் மறக்காமல் இருக்கவேண்டும்.அதற்காகத் தான் நீர்மேலும் கல்மேலும் அந்த செய்கைகளை எழுதினேன். ஒரு உண்மையான நண்பனை பொறுத்துப் போவதுதான் உண்மையான நட்பு.ஒருவர் பொறை இருவர் நட்பு என்பதுதான் நட்பின் இலக்கணம் என்றான்.


இன்றைய செய்திகள் 02.02.2026
 

  •  மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று நாடாளுமன்றத்தில் 2026-27 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
  • திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வள்ளலார் நெடுஞ்சாலை எனப் பெயர் சூட்டப்படும் -மு.க.ஸ்டாலின்
  • கேரளாவில் அரசு & அரசு உதவி பெறும் கல்லூரிகளில் கலை மற்றும் அறிவியல் இளநிலைப் படிப்புகளை பயிலும் மாணவர்களுக்கு இனி கல்விக் கட்டணம் இல்லை என கேரள மாநில அரசு அறிவித்துள்ளது.
  • காங்கோ நாட்டில் உள்ள தங்க சுரங்கத்தில் மண் சரிந்து விழுந்து 200 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • பிராந்திய போர் வெடிக்கும்' அமெரிக்காவை எச்சரிக்கும் ஈரான்!

 விளையாட்டுச் செய்திகள்

  •  டி20 உலகக் கோப்பை: "இந்தியாவுக்கு எதிராக விளையாட மாட்டோம்" என பாகிஸ்தான் அறிவிப்பு
  • ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச்சை வீழ்த்தி அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றார். இளம்வயதில் 7 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை கார்லோஸ் அல்காரஸ் வென்று சாதனை.
  • இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி திருவனந்தபுரத்தில் நடந்த்து.46 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா டி20 தொடரை 4-1 என கைப்பற்றியது.


Today's Headlines

  • Finance Minister Nirmala Sitharaman presented the Budget for 2026-27 in Parliament yesterday.

  • M.K. Stalin has announced that the Thiruvottriyur Highway will be named as Vallalar Highway.

  • The Kerala state government has announced that there will no longer be any tuition fees for students pursuing undergraduate courses in Arts and Science in government and government-aided colleges in Kerala.

  • 200 workers died in the Congo gold mine due to the sand slide 

  •  Iran  warned  US that there will be regional war.


 *SPORTS NEWS*

  •  T20 World Cup: Pakistan announces "We will not play against India"
  • Australian Open Tennis: Alcaraz beats Djokovic to win championship. Carlos Alcaraz wins 7 Grand Slam titles at a young age.
  • .The 5th and final T20 match between India and New Zealand was played in Thiruvananthapuram. India won the T20 series 4-1. by 46 runs

Post a Comment

0 Comments